Friday, December 4, 2009 | By: காவிரி நாடன்

காயங்கள் குணமாகும்

காயங்கள் குணமாகும்

மகனே
என் ராசா
நாட்டோட முதுகெலும்புன்னு சொல்லுறாங்க
ஆனா சாபம் புடிச்ச பொழப்பய்யா
நம்ம பொழப்பு

கண்ணே கொஞ்சம் பொறுத்துக்கோ
காயங்கள் சீக்கிரமே குணமாகும்

நான் தடவி பாக்கும் உன் சரீரம்
நித்தம் முத்தங்கானும் உன் விரலு
வழியல துடிக்குதாய்யா ?
என் நெஞ்சு அடைக்குதய்யா

உன் வலி சுமக்கும் ஒரு வழியிருந்தா.....
காலத்துக்கும் சுமப்பேனே .

மாத்து துணிக்கே வழியில்ல
மருந்துக்கு எங்க போவேன் ?

உனக்கொரு மத்தாப்பு வாங்கி தர
ஒரு மாசம் வெத்தலைய ஒழிச்சேனய்யா

யாரோ போட்ட துணி
தொவச்சு, சாயம் போட்டு
கொறச்ச வெலைக்கு சந்தையில வித்தாங்க .........
ஓடிப்புடிச்சு ஒன்னளவு ஒருசோடி வாங்கியாந்தேன்

ஏழை வூட்டு அடுப்பு போல
பொசு பொசுன்னு புகை வருமே
பாம்பு மாத்தர கொஞ்சம்
சந்தையிலே பொருக்கியாந்தேன்....

நேரம் செண்டா கல்லா இருகிபோகும் சிலேபி நாலு ....
சுடச்சுட கெளறிபோட்ட பூந்தி நாலு ....
மிச்சத்துக்கு காராசேவு ....
விடிகாத்தால உனக்கு தர வீட்டுக்குள்ள ஒளிச்சு வெச்சேன் .


பண்டிகைக்கு மொதநா ராத்திரி ......

வகவகயா மத்தாப்பு ......
- நின்னு வேடிக்க பாத்துக்கிட்ட.
விட்டு விட்டு வெடி சத்தம் ....
-காத பயத்தோட போத்திக்கிட்ட.
விதவிதமா வானவேடிக்கை .....
-அப்பப்ப அண்ணாந்து பாத்துக்கிட்ட .

வேடிக்க பாத்துக்கிட்டே விரல் புடிச்சு
ராவெல்லாம் சுத்தி வந்த ....

மச்சு வூட்டுகாரங்க
உடச்ச மத்தாப்பும் ...உதிர்ந்த வெடியும் சும்மா கொடுக்க
புடிவாதமா மறுத்து ..மானங்காத்து
என் பின்ன மறஞ்சு நின்ன .....

வாசலிலே தல வெச்சு அப்படியே தூங்கி போன
வெடிச்சத்தம் கேட்டு வெரசா எழுந்து
வெந்நீ வெச்சு எண்ணை தேச்சு
வெளிநாட்டு தொரை போல உடுத்தி வந்த ....


என் கண்ணே பட்டுடுச்சா என் ராசா


வாங்கி தந்த பட்டாச
சிக்கனமா நீ வெடிச்சும் ...
சீக்கிரமா தீந்து போச்சு
உன் ஆசை கொஞ்சம் மீந்து போச்சு ....

கடைசியா எங்கிட்ட பத்து ரூவா
கெஞ்சி கெஞ்சி வாங்கி
பட்டாசு கடையில
மிச்சம் மீதி , உதிரி வெடி , ஓட்ட வொடசல்
பையோட வாங்கியாந்த....

உதிரிவெடி...ஒத்தவெடி...ஒன்னும் வெடிக்கலையே...
ஏழை வாழ்க்கை போல எல்லாம் பொய்யாச்சு....

ஆனா வேகங்கொறையாம
மனசு விடாம ஒன்னு செஞ்ச ...

உதிரிவெடி ,ஓலவெடி மிச்சம் மீதி உதிர்த்து போட
கெடச்சது கை நெறைய கந்தக தூளு
கடுதாசியில மடுச்சு .....திரி ஒன்னு புடுச்சு .....
நீயே வெடி செஞ்ச ...
ஓடிபோயி பத்தி கொளுத்தி...சரியா திரியில நெருப்பு வெச்ச ....
ஆனா
பாழப்போன பட்டாசு மட்டும் வெடிக்கலையே......

கொஞ்சமும் அசராம அலுங்காம குலுங்காம .......
மெல்ல கிட்ட போயி , லேசா அசச்சு விட்ட
கந்தகம் பத்திக்கிச்சு
உன் உடம்பு பட்டுபோச்சே !

சீக்கிரம் ஆறாதைய்யா......
தீக்காயம் சீக்கிரம் ஆறாதே !

பேனா மையக் கொட்டி
ஒடம்பெல்லாம் தொட்டு வெச்சேன்
மிச்சத்துக்கு மாவு பத்து போட்டு வெச்சேன் .....

மகனே நீ தூங்கு !
வலியோட தூங்கு ......
வலி மரத்து போகும் ....
வறுமையோட வாழ்க்கையும் பழகி போகும் .....

கண்ணே கொஞ்சம் பொறுத்துக்க ....
சீக்கிரமா கொணமாகும்...
காயங்கள் நம்ம வாழ்க்கை போலல்ல .....
சீக்கிரமே குணமாகும் ......

( அந்த கண்களில் கசிவது கண்ணீரல்ல ....... நிறமற்ற இரத்தமென்று உணர்ந்த ஓர் இரவில் பிறந்த தாலாட்டு கவிதை இது )
Tuesday, September 2, 2008 | By: காவிரி நாடன்

என் அம்மாவுக்கு

இன்னும் என் நினைவிருக்கிறதா அம்மா ?

எங்கே தொலைத்தாயம்மா - என்னை
எங்கே தொலைத்தாய்

சந்தைகளில் தொலைத்தாயா -
திருவிழாக்களில் மறந்தாயா -
திருடனேதும் பறித்தானா ?

எங்கே தொலைத்தாயம்மா - என்னை
எங்கே தொலைத்தாய் ?

சாலைகளில் சில மாலைகளில்
தாயின் விரல் கோர்த்து நடக்கும் பிள்ளைகள்...
நானும் விரல்பிடிக்க மறந்தேனோ -
உன்னை தொலைத்தேனோ ?
நீயாவது என் கரம் பிடித்திருக்க கூடாதா ?

உன் மடி மீது
தலை சாய்த்ததில்லை

உன் நெற்றி முத்தம்
ருசித்ததில்லை

உன் உள்ளங்கை சூடு
என் கன்னங்கள் உணர்ந்ததில்லை

என் தலை கோதும் உன் விரல்கள்
பற்றி விளையாடியதில்லை

உன் சேலைகளில்
ஒளிந்து விளையாடியதில்லை

உன் விரல் ருசி
என் உதடுகள் அறிந்ததில்லை

ஒரு முறையேனும் ஊட்டி விடுவாயா ?
அம்மா...
அது விசமென்றாலும் சம்மதம்.

என்றேனும் சாலைகளில் சந்தித்தால்...
அடையாளம் காண்பாயா - இல்லை
கடந்து செல்வாயா ?

காலம் சம்மதிக்குமா அம்மா
நம் சந்திப்பிற்கு...

மௌனமே மொழியாய்...

முதன் முதலாய் சந்தித்தோம்
காற்று கலைத்த ஒற்றை முடி
கதிர் கலைத்த இன்முகம்
அச்சம் குடித்த பார்வைகள்
தயக்கம் படிந்த வார்த்தைகள்
ஒற்றை புன்னகையில் விடைபெற்றோம்


மாலைகளில் சந்தித்தோம்
கவிதை நூல்கள் பகிர்ந்தோம்
ரசனைகள் அறிந்தோம்
பொறாமை கண்கள் பெற்றோம்
புன்னகைத்தோம் -
மீண்டும் மீண்டும் விடைபெற்றோம்


கருத்து வேற்றுமை கொண்டோம் -
என் கருத்துக்கு நீயும்
உன் கருத்துக்கு நானும் உருமாறினோம்
நமக்காக
நம் கருதுக்களோடே வேற்றுமை கொண்டோம்
தனிமைகளில் புன்னகைத்தோம்


விமர்சனங்களால் கிழிந்தோம்
விமர்சனங்களை கிழித்தோம்
சில விழிகளில் விழுந்தோம்
பல வலிகளில் விழித்தோம்


நட்பின் மீதான பாசம்
தைரியத்தின் தலை கொய்தது
நாகரிகத்தின் உச்சம்
நம் நேசம் புதைத்தது


புரியாத மௌனங்கள்
சொல்லாத வார்த்தைகள்
சூழ்நிலையின் சூழ்ச்சிகள்
பொருளாதார வீழ்ச்சிகள்
நாம் கொண்டது நட்பென்று
சத்தியம் செய்தது


எனக்காக நீயும் உனக்காக நானும்
பொய்யென்று அறிந்தும்
நட்பென்றே மௌனித்தோம்
வெறறு புன்னகையோடு விடைபெற்றோம்


அந்தி மாலையில்
கன்னங்களில் கண்ணீரும்.....
சாலைகளில் பாதங்களும்......

வடிந்த கண்ணீர் துளியொன்று
பாதம் நனைத்தது மௌனத்தோடு...